ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் 25 ஆம் நாள் கிறிஸ்மஸ் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. வழக்கமாகக் கிறிஸ்மஸ் பண்டிகை என்றாலே அது கிறித்தவ மத நிறுவனராகக் கருதப்படும் இயேசுவின் பிறந்த நாளாகவே அறிகின்றோம் அல்லவா. ஆனால் நீங்கள் சிந்தித்தது உண்டா ஏன் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு மதச்சார்ப்பற்ற நாடுகளில் இதற்கு விடுமுறை வழங்கப்படுகின்றது. கிறிஸ்மஸ் ஐரோப்பியர்களிடம் பல ஆண்டுகள் கிறிஸ்தவப் பண்டிகையாகவே கொண்டாடப்பட்டு வந்தே போதும், உண்மையில் அப் பண்டிகை கிறிஸ்தவ மதம் நிறுவப்படும் முன்னரே அவர்களிடம் ஆழமாக ஊன்றிவிட்டது.
சொல்லப் போனால் கிறிஸ்தவ மதம் ஐரோப்பாவுக்குப் பரவ முன்னரே காலம் காலமாக ஐரோப்பியர்கள், மத்திய கிழக்கினர்கள், வடக்கு ஆப்பிரிக்கர்கள், இந்தோ-ஆரியர்கள் எனப் பல இனங்களும் இந்தப் பண்டிகையை வெவ்வேறு வடிவங்களில், பெயர்களில், தினங்களில் கொண்டாடி வருகின்றனர். இன்று கிறிஸ்மஸ் என்பது தீபாவளி போல மதச்சார்ப்பற்ற ஒரு பண்டிகையாக இன்று மாறிவிட்டது என்பதே உண்மை. கிறிஸ்மஸ் தினம் என்பது பண்டைய மதங்களில் இருந்து கிறித்தவர்களால் காப்பியடிக்கப்பட்டவை ஆகும்.
இயேசுக் கிறிஸ்து திசம்பர் 25 யில் பிறந்தமைக்கான எவ்வித சான்றுகளும் விவிலியத்தில் இல்லை. கத்தோலிக்கர்கள் பண்டைய பாரசீக - ரோமர்களின் குளிர்க்காலப் பண்டிகையைக் கிறிஸ்மஸாக மாற்றிக் கொண்டார்கள். திசம்பர் 25 ஆம் நாள் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாரசீக - அசிறியர்களின் கடவுளான
மித்ரனின் பிறந்த தினமாகவே கொண்டாடப்பட்டு வந்தது.
சூரியனிடமிருந்து பூமி தள்ளிப் போகும் தினத்தையே (
Winter Solstice ) அவர்கள் மித்ரனின் பிறந்த நாளாகக் கொண்டாடத் தொடங்கினார்கள். அதாவது பகல் வேளை சுருங்கி இரவு வேளை அதிகரிக்கும் குளிர்க்கால நாளை அவர்கள்
மித்ரனின் பிறந்த நாளாகக் கருதினார்கள். அவர்களின் கணிப்புப் படி அதனை இன்றைய திசம்பர் 25 ஆகக் கணக்கிட்டார்கள். இந்தியக் நாட்காட்டியின் படி இதனை (தை)பூச மாததின் மகரச் சங்கராந்தி தினத்தில் நிகழ்வதாகக் கருதினார்கள். அதனாலேயேமகரச் சங்கராந்தி தினத்தில் சூரியன், இந்திரன் போன்றவர்களை இந்தியர்கள் வழிப்பட்டார்கள். இதனைத் தமிழர் பண்டிகையாக மாற்றியது தனிக் கதை அதனைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம். ஆனால் உண்மையில் நவீன அறிவியலின் கணிப்பின் படி அது திசம்பர் 20, 21 நாள்களிலேயே ஒவ்வொரு ஆண்டும் நிகழ்கின்றது.
இனி மித்ரனைப் பற்றியும், மித்ரன் இயேசுவாகப் புனையப்பட்டதையும் கவனிப்போமாக. மித்ரன் என்ற கடவுள் இன்றைய துருக்கி முதல் பார்சீகம் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் 3000 ஆண்டுகளுக்கு முன் வணக்கப்பட்டு வந்தான். துருக்கியின் மிட்டானி என்ற பகுதியில் கிடைத்த கல்வெட்டு மித்ரனின் பல தகவல்களைக் கொடுக்கின்றன. மித்ரன், இந்திரன், வருணன் ஆகிய கடவுளர்களும் பாரசீகத்தின் இந்தோ-ஆர்ய மக்களால் வணங்கப்பட்டு வந்தனர். இவையே பிற்காலப் பார்ப்பனர்களால் ரிக்கு வேதங்களில் பாடப்பட்டு இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டன.
இயேசுவைப் போலவே மித்ரன் (சூரியக்) கடவுளாகவும், (சூரியக்) கடவுளின் மகனாகவும் கருதப்பட்டர். இயேசுவைப் போலவே மித்ரன் கன்னித் தாயின் வயிற்றில் தோன்றினார் எனவும் புராணங்கள் கூறுகின்றன. மித்ரன் தனது தீ சக்தியால் அனைவரையும் பரிசுத்தப்படுத்துவார் எனவும் அவர்கள் கருதினார்கள். மித்ரனை இந்தோ-ஆரியர்கள், அசிறியர்கள், துருக்கியர்கள், பாரசீகர்கள், ரோமர்கள், கிரேக்கர்கள், பீனிசியர்கள் எனப் பலரும் வணங்கினார்கள்.
கிமு 100- ஐ சேர்ந்த பிளாவியஸ் ஐஜினஸ் (Flavius Hyginus) ரோமானியக் கல்வெட்டில் மித்ரனை சூரியக் கடவுளாக ரோமர்கள் போற்றுகின்றார்கள் என்ற குறிப்புக் காணப்படுகின்றது. . மித்ரன் சூரியனின் ஒளிவட்டமாகவும், நான்கு வெள்ளைக் குதிரையில் வருவார் எனவும் அம் மக்கள் நம்பினார்கள். இதே மித்ரனைத் தான் பார்ப்பனர்கள் சூரிய பகவனாகவும், ஏழு குதிரைப் பூட்டிய தேரில் வருவான் எனவும் புனைந்தார்கள். பார்சி மதத்தினர், மானி மதத்தினர் தமது கடவுளாகவும் மாற்றிக் கொண்டார்கள். பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட மகாயான பௌத்த மதத்தில் மித்ரனையே மைத்ரேய புத்தராகப் பிரச்சாரம் செய்தனர். பிற்காலக் கிறித்தவர்கள், முஸ்லிம்கள் அடங்கிய ஆபிரகாமிய மதத்தினர்
இயேசுக் கிறிஸ்துவாகவும் / ஈஸா நபியாகவும் மாற்றிக் கொண்டார்கள். கிறித்தவர்கள் / இஸ்லாமியர்கள் இதே குதிரைப் புனைவையே நியாயந்தீர்க்கும் நாளில் மெஸியா / மக்தி வெள்ளைக் குதிரையில் வருவார் எனக் கூறுகின்றார்கள். ஆக உலகின் இன்றைய பெரும்பான்மை மதங்கள் அனைத்திலும்
மித்ரன் வழிபாடு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக வரலாற்று ஆய்வாளர்கள்
மித்ரன் மூன்று பரிணாமங்களை அடைந்தத்தாகக் கருதுகின்றனர்.
மித்ர - வேதக் கடவுள், மித்ரா - பாரசீக கடவுள், மித்ராஸ் - கிரேக்க-ரோமக் கடவுள். கிபி மூன்றாம் நூற்றாண்டு அளவில் மித்ரன் வெவ்வேறு பெயர்களில் இந்தியா முதல் ஸ்காட்லாந்து வரை மக்களால் வழிப்படப்பட்டு வந்தான். சுமார்
400-க்கும் மேற்பட்ட மித்ர வழிப்பாட்டு எச்சங்கள் இந்த நாடுகளில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. கிரேக்க -ரோமானியர்கள் ஊடாக மித்ர வழிப்பாடு இன்றைய கிறித்தவ மதத்தில் பெருமளவில் உள்வாங்கப்பட்டுள்ளது. மித்ரனின் புராணத்துக்கும் - இயேசுவின் புராணத்துக்கும் மிக அதிகமான ஒற்றுமைகள் காணப்படுவதே இதற்குச் சிறந்த உதாரணமாகும்.
இயேசுவைப் போலவே மித்ரனுக்கு 12 சீடர்கள் இருந்தார்கள்.
இயேசுவைப் போலவே மித்ரன் பிறந்த போது ஆடு மேய்ப்பர்களால் அவன் சூழப்பட்டு இருந்தான்.
இயேசுவைப் போலவே மித்ரன் ஆசானாகவும், போதனையாளனாகவும் பல இடங்களுக்குப் பயணம் செய்தவன் எனவும் அறியப்படுகின்றான்.
மித்ரன் "சூரியனின் பெரிய எருது" என அறியப்பட்டு, தன்னையே உலகச் சமாதானத்துக்காகப் பலிக் கொடுத்தான். இயேசுவோ '' ஆட்டுக்குட்டியான்வர் '' என அறியப்பட்டுத் தன்னையே பலியாகக் கொடுக்கின்றார்.
இயேசுவைப் போலவே மித்ரன் சுவர்க்கத்துக்குச் சென்றான் எனவும் அறியப்படுகின்றது.
மித்ரன் இயேசுவைப் போலவே உலக ஒளியாகவும், சத்திய வாக்காகவும் அறியப்பட்டான்.
மித்ரன் சிங்கமாகவும், ஆட்டுக்குட்டியாகவும் உவமைக் கொள்ளப்பட்டான். இயேசுவோ ஆட்டுக்குட்டியாக உவமை கொள்ளப்பட்டார்.
மித்ரனின் புனித நாள் ஞாயிற்றுக் கிழமை ஏனெனில் அவனே சூரியனாகவும், சூரியப் புத்திரனாகவும் இருக்கின்றான் என்பதால். கிறித்தவர்களும் யூதர்களைப் போலச் சனிக்கிழமையைச் சப்பத் தினமாக அனுசரிக்காமல் ஞாயிர்றுக் கிழமையையே சப்பத் தினமாக அனுசரிக்கின்றார்கள்.
மித்ராயிஸ மதத்தில் விருந்தோம்பல் வைபவமும் உள்ளது, கிறித்தவம் போன்றே.
மித்ராயிஸ மதம் ஞானஸ்நானம், திருமுழுக்கை கடமையாக்கியுள்ளது.
இயற்கையைக் கவனித்த நமது மூதாதையர்கள், அவற்றில் நிகழும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு சில பல புனைவுகளையும், கடவுளர்களையும் உருவாக்கினார்கள். அதுவே பிற்காலத்தில் எழுந்த அரசியல் சார்ந்த பெரும் மதங்களால் உள்வாங்கப்பட்டுப் புராணங்களாக வடிக்கப்பட்டுவிட்டன. இன்று கிறிஸ்மஸ் தினம் கிறித்தவப் பண்டிகை என்ற நிலையைத் தாண்டி அது எங்குத் தொடங்கியதோ அங்கே செல்லத் தொடங்கியுள்ளது. பல எவாஞ்செலிஸ் கிறித்தவர்களே இயேசுப் பிறந்த தினம் திசம்பர் 25 ஆக இருக்க முடியாது எனக் கூறிவருகின்றார்கள்.
ஆகையால் பகுத்தறிவாளர்கள் இந்தப் பண்டிகையை வழக்கமான கேளிக்கையோடு மனைவி மக்களோடு தாராளமாகக் கொண்டாடலாம். அதே சமயம் புனைவுகள், கடவுளர்கள் எல்லாம் வெறும் கற்பனை என்பதையும், இயற்கையின் மாற்றங்களையும், காலநிலைகளையும் மனதாற விரும்பி அவற்றுக்கு நன்றி செலுத்துவோம் என்பதையும் நினைவில் நிறுத்தி நமது சந்ததியினருக்கும் எடுத்துரைப்போமாக.